பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினர் இட ஒதுக்கீடு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்...

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டுக்காக 8 லட்சம் ரூபாய் என வருமான உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டது தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினர் இட ஒதுக்கீடு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில்  மத்திய அரசு அறிக்கை தாக்கல்...

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு மருத்துவப் மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் 10சதவீதம் வழங்கியதை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கடந்த ஜூலை அறிவிப்பாணை வெளியிட்டது. இதை எதிர்த்து  தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10சதவீத இடஒதுக்கீடு, மற்றும் 8 லட்சம் ரூபாய் என்ற  வருமான அளவுகோல் ஆகியவை எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது கேள்வியெழுப் பியதோடு, அதுகுறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த 21ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த வழக்கில்  விவகாரத்தில் மத்திய  அரசு,உச்ச நீதிமன்றத்தில் ஒரு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.  அதில்,பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு சின்கா கமிட்டி உத்தரவின் அடிப்படையில்தான்  10 சதவீத கூடுதல் இடஒதுக்கீடு மற்றும் 8 லட்சம் என்ற வருமான உச்சவரம்பு அளவுகோல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் அதனால் ஓபிசி இட ஒதுக்கீட்டோடு இதனை ஒப்பிட்டு பார்க்க முடியாது என கூறப்பட்டுள்ளது.

மேலும் "Creamy layer"-க்கு எதன் அடிப்படையில் கொடுக்கப்படுகிறதோ அதன் அடிப்படியில் தான் 8லட்சம் உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் குடும்ப வருமானமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கூடுதல் 10 சதவீத இட ஒதுக்கீட்டு சலுகைகள் என்பது 8 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் உள்ள உயர் வகுப்பினர் மற்றும் எஸ்சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கு கொடுக்க முடியாது. 

இவை அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டுதான் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி இந்த திட்டம்  கொண்டு வரப்பட்டது.மேலும் மனுதரர்கள் கூறியது போன்று எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமலோ அல்லது அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யாமலோ இந்த உச்சவரம்பு வரைமுறையை நாங்கள் நடைமுறைக்கு கொண்டு வரவில்லை.  எனவே மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதால் அவர்களது கோரிக்கையை நிராகரித்து அதை  தள்ளுபடி செய்ய வேண்டும் என அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.