மெட்ரோ ரயில் நிலையம் அருகே வணிக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 27 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழப்பு!!
டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகேயுள்ள 3 மாடி வணிகக் கட்டிடத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமனவென பரவியதில் கட்டிடம் முழுவதும் கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் இந்த தீ விபத்தில் சிக்கி வணிக வளாகத்தின் உள்ளே இருந்த 27 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
40 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் போராடி தீயை அணைத்தனர்.
இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.