மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் 62 லட்சத்துக்கு மேற்பட்ட காலி பணியிடங்கள்...இன்னும் நிரப்பப்படவில்லை - காங்கிரஸ் குற்றச்சாட்டு!

மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் 62 லட்சத்துக்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் 62 லட்சத்துக்கு மேற்பட்ட காலி பணியிடங்கள்...இன்னும் நிரப்பப்படவில்லை - காங்கிரஸ் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சிப்பொறுப்பேற்று நேற்றுடன் 8 ஆண்டுகள் ஆகிறது. இதைெயாட்டி மத்திய அரசின் தோல்விகளை பட்டியலிட்டு காங்கிரஸ் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. 

அதில் இந்தியாவில் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ், அவற்றை நிரப்ப மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சாடியுள்ளது.  குறிப்பாக மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 9 லட்சத்துக்கு அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. 

மேலும் பொதுத்துறை வங்கிகளில் 2 லட்சம் காலியிடங்களும், 1.68 லட்சம் சுகாதார ஊழியர் பணியிடங்கள் மற்றும் 1.76 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேப்போல் ராணுவத்தில் 2. 55 லட்சம் பணியிடங்களும், மத்திய ஆயுதப்படைகளில் 91,929 பணியிடங்களும், மாநில போலீஸ் துறையில் 5.31 லட்சம் பணியிடங்களும், பல்வேறு நீதிகளில் 5 ஆயிரம் பணியிடங்களும் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாக சாடியுள்ள காங்கிரஸ் மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் 30 லட்சத்துக்கு மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

மேலும் இப்பட்டியலை வெளியிட்ட கட்சியின் முதன்மை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, இளைஞர்கள் பணிக்காக ஏங்குவதாகவும், ஆனால் அரசுகள் காலியிடங்களை நிரப்ப ஆர்வம் காட்டவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அதேவேளையில்  மோடி அரசு பதவியேற்ற 8 ஆண்டுகளில் மத மோதல்கள் தான் அதிகரித்து இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். அந்தவகையில் கடந்த 2016-2020-ம் ஆண்டு காலத்தில் 3,400 மதக்கலவரங்கள் நடந்திருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில் இதன் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என்றும் கூறியுள்ளார். 

கடந்த 2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில், தலித் பிரிவினர் மீதான வன்முறை 12 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் காஷ்மீரில் 548 பாதுகாப்பு படையினர், 324 பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும், இந்திய-சீன எல்லை தொடர்ந்து பதற்றத்தில் இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.