உத்தரகாண்ட் சாலை விபத்து... பிரதமர் மோடி, முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு...
உத்தரகாண்ட் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, தனித்தனியே நிதியுதவி அறிவித்துள்ளனர்.
டேராடூன் மாவட்டம் சக்ரதாவில் எதிர்பாராத விதமாக, பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், டேராடூன் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, பிரதமர் நிவாரண நிதியில் இருந்து கருணைத் தொகையாக தலா 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதைப்போல, விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.