நாட்டின் 5 மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தலில்.. கணிசமான தொகுதிகளை கைப்பற்றிய பாஜக!!

நாட்டின் பல்வெறு மாநிலங்களில் 3 மக்களவைக்கும், 7 சட்டப்பேரவைகளுக்கும் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக கணிசமான வெற்றியை பெற்றுள்ளது.

நாட்டின் 5 மாநிலங்களில் நடைபெற்ற  இடைத் தேர்தலில்.. கணிசமான தொகுதிகளை கைப்பற்றிய பாஜக!!

உத்தரப்பிரதேசத்தில் எம்பிக்களாக இருந்த அகிலேஷ் யாதவும், ஆசம் கானும், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து, எம்எல்ஏ பதவியை தக்க வைத்துக்கொள்ள முடிவெடுத்தனர். இதனால், அந்த இரு மக்களவைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது.இந்த 2 தொகுதிகளிலும், பாஜக வெற்றி பெற்றுள்ளது.

அகிலேஷ் யாதவின் தொகுதியாக இருந்த ஆசம்காரில் பாஜகவின் தினேஷ் லால் யாதவ் வெற்றி பெற்றுள்ளார். ராம்பூரில் பாஜகவின் கான்ஷியாம் லோதி வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோல், பஞ்சாபின் சங்ருர் தொகுதி எம்பியாக இருந்த பகவந்த் மான், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சரானதை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஷிரோமணி அகாலி தள் வேட்பாளர் சிம்ரன்ஜித் சிங் மான் வெற்றி பெற்றுள்ளார். இந்த 3 மக்களவைத் தொகுதிகள் இல்லாமல், ஆந்திரப்பிரதேசம், டெல்லி, ஜார்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும், திரிபுராவில் 4 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது.

இதில், ஆந்திரப்பிரதேசத்தில் ஆத்மகுர் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரம் ரெட்டியும், டெல்லியில் ராஜிந்தர் நகர் தொகுதியில் போட்டியிட்ட ஆளும் ஆம் ஆத்மி வேட்பாளர் துர்கேஷ் பதக்கும், ஜார்க்கண்ட்டில் மாந்தர் தொகுதியில் போட்டியிட்ட ஆளும் கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஷில்பி நேஹா திர்க்கியும் வெற்றி பெற்றனர்.

 திரிபுராவில், முதலமைச்சர் மாணிக் சகா தான் போட்டியிட்ட போர்டோவாலி தொகுதியில் வெற்றி பெற்றார். இதேபோல், பாஜகவின் மலினா தேப்நாத் ஜூபராஜ்நகர் தொகுதியிலும், ஸ்வப்னா தாஸ் பால் சுர்னா தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.