விண்வெளிக்கு பறக்கும் 2-வது பெண் என்ற சாதனையை பெற்றவர் யார்?

விண்வெளிக்கு பறக்கும் 2-வது பெண் என்ற சாதனையை தனக்கு சொந்தமாக்கி கொண்ட இந்திய பெண் ஸ்ரீஷா பாண்ட்லா விண்வெளி பயணம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விண்வெளிக்கு பறக்கும் 2-வது பெண் என்ற சாதனையை பெற்றவர் யார்?

இந்தியாவில் பிறந்து, விண்வெளிக்கு பறந்த முதல் பெண் என்ற சாதனையை படைத்தவர் கல்பனா சாவ்லா. அவருக்கு அடுத்தபடியாக, விண்வெளிக்கு பறக்கபோகும் இந்தியாவில் பிறந்த 2-வது பெண் என்ற பெருமையை ஸ்ரீஷா பாண்ட்லா தனக்கு சொந்தமாக்கி கொள்ளப்போகிறார்.

34 வயதாகும் ஸ்ரீஷா, ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலியில் பிறந்தவர். இவருக்கு 5 வயதாக இருக்கும்போது தந்தை டாக்டர் பாண்ட்லா முரளிதரும், தாய் அனுராதாவும் அமெரிக்கா ஹூஸ்டனுக்கு இடம்பெயர்ந்தனர். விஞ்ஞானியான பாண்ட்லா முரளிதர், அமெரிக்க அரசுத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இதனால் அமெரிக்காவிலேயே தனது படிப்பை மேற்கொண்ட ஸ்ரீஷா, அங்கு பர்டியூ பல்கலைக்கழகத்தில் விமான பொறியியலும், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார். இதையடுத்து ஸ்ரீஷா விண்வெளி பயண நிறுவனமான விர்ஜின் கேலக்டிக்-கில் கடந்த 2015-ம் ஆண்டில் இணைந்தார். அங்கு, அரசு சார்ந்த விவகாரங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை கவனித்து வந்த இவர், பின்னர் நிறுவனத்தின் துணைத் தலைவராக உயர்ந்தார். இந்த தனியார் நிறுவனத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் என்பவர் அமெரிக்காவில் நிறுவினார்.

இந்த நிறுவனத்தின் ‘வி.எஸ்.எஸ். யூனிட்டி’ விண்கலம், வருகிற 11-ந் தேதி அமெரிக்காவின் நியூ மெக்சிகோ ஏவுதளத்தில் இருந்து விண்வெளிக்குப் பயணத்தைத் தொடங்குகிறது. அதில் பயணிக்கப்போகும் 6 விண்வெளி வீரர் மற்றும் வீராங்கனைகளில் ஒருவர் ஸ்ரீஷா. இவருடன் செல்லும் விண்வெளி பயணிகளில், விர்ஜின் கேலக்டிக் நிறுவனரான ரிச்சர்ட் பிரான்சனும் அடங்குவார் .இதற்கிடையே, தனது விண்வெளி பயணம் குறித்து டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஸ்ரீஷா, விண்வெளிக்கு பறக்கும் 2-வது பெண் என்பது மிகப்பெரும் கவுரவம் என்று கூறியுள்ளார். மேலும்,ஸ்ரீஷாவின் இந்த சாதனைக்கு முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.