20 பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன - மத்திய அரசு

தமிழகத்தில் 20 பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன - மத்திய அரசு

20 பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன - மத்திய அரசு

தமிழகத்தில் 20 பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பெரும்பான்மையான சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், ஒரு காலத்தில் பாரம்பரியமாக விளைவித்து வந்த தங்கள் பாரம்பரிய நெல் விதைகளை கலப்பின ஒற்றைப்பயிர் சாகுபடியால் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை விதைகளின் தனித்துவமான ஊட்டச்சத்து மற்றும் சூழலியல் குணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் சுமார் 20 பாரம்பரிய நெல் ரகங்கள் கண்டறியப்பட்டு, சேகரிக்கப்பட்டு, மீட்டெடுக்கப்பட்டுள்ளதுடன், சமுதாய விதை வங்கிகள் மூலம் மாநிலத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், அரியலூர், செங்கல்பட்டு, கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 24 மாவட்டங்களில் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் விருப்பமுள்ள விவசாயிகளைக் கண்டறிந்து இந்த சமூக விதை வங்கிகள் மூலம் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் பாரம்பரிய நெல் விதை வங்கிகளை வலுப்படுத்த ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ.2000 வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, திருவாரூரில் உள்ள CREATE என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த நெல் விதை பரிமாற்றத் திருவிழா மூலம் பாரம்பரிய நெல் விதை ரகங்களான கருப்பு கவுனி, தூய மல்லி, மாப்பிள்ளை சம்பா, கருங்குருவை மற்றும் பலவற்றை விநியோகிக்க உதவியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.