சபரிமலை சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதென்ன.....

சபரிமலை சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதென்ன.....

ஆர் டிசி மீடியா - கே கே ஆர் சினிமாஸ் வழங்கும் துர்கா ராம் சௌத்ரி - நீல் சௌத்ரி தயாரித்து இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் தி கிரேட் இந்தியன் கிச்சன்.

தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் படக்குழுவினர் கலந்து கொள்ளும் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், சுஹாசினி மணிரத்னம், இயக்குநர் கண்ணன், எழுத்தாளர் ஜீவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகை கலைராணி,

"தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை மலையாளத்தில் பார்த்து வியந்து போனேன்.  நம்மில் எவ்வளவு பேருக்கு ஆண்களுக்கு கிச்சனுடன் கனெக்சன் இருக்கிறது என்றும், வீட்டில் இருக்கும் பெண்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்றும் தெரிந்தது.  தற்போது நிறைய ஆண்கள் சமையல் கற்று கொள்வதாகவும், இதை தமிழில் எடுக்கும் போது சந்தோஷமாகவும், கொஞ்சம் பயமாகவும் இருந்தது" என்று கூறியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்,

அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், “டிரைவர் ஜமுனா படத்திற்கு தந்த ஆதரவிற்கு நன்றி.  அதே ஆதரவை தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்திற்கும் தர வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.  ஆணாதிக்கம் இன்றளவும் உள்ளதா என்ற கேள்விக்கு, “ஆம் உள்ளது.  இதனால் கிராம பெண்கள் நகர பெண்களை விட அதிகமாக பாதிக்கபடுகின்றனர்.” எனக் கூறியுள்ளார்.

கிச்சனில் உங்கள் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு “எனக்கு கிச்சனில் அவர் உதவி செய்ய வேண்டும். ” எனப் பதிலளித்துள்ளார்.  சபரிமலையில் பெண்கள் அனுமதி மறுப்பு குறித்து உங்கள் கருத்து என்ற நிரூபரின் கேள்விக்கு, “ஆணும் பெண்ணும் சமம்.  எந்த கடவுளும் யார் யார் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்று கூறவில்லை.  அப்படி எதாவது ஒரு கடவுள் கூறியிருந்தால் எனக்கு காட்டுங்கள்.” எனக் கூறியுள்ளார்.

திராவிட ஆட்சியில் பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு, “பெண்கள் சம உரிமை பெற்றுள்ளனர் ” எனப் பதிலளித்துள்ளார்.

மேலும் திரைப்படம் பிப்ரவரி 03 வெளியாகவுள்ளதாகவும் அதற்கு முழு ஆதாரவு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  திமுகவிற்கு பயப்படும் பாஜக..... இடைத்தேர்தலில் போட்டியில்லை!!!