வடசென்னை பாகம் 2.... அறிவிப்பை வெளியிட்ட வெற்றிமாறன்!!!

வடசென்னை பாகம் 2.... அறிவிப்பை வெளியிட்ட வெற்றிமாறன்!!!

விடுதலை படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் வெற்றிமாறன், வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

இரண்டாம் பாகம் எடுக்கும் கலாச்சாரம் தற்போது தமிழ் சினிமாவில் அதிகளவில் உள்ளது.  ஏற்கனவே சிங்கம், காஞ்சனா, எந்திரன், பீட்சா போன்ற படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் ரிலீஸ் ஆன நிலையில், தற்போது ஜிகர்தண்டா, சார்பட்டா பரம்பரை, பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு, விடுதலை, காந்தாரா போன்ற படங்களின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.  இதுதவிர ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2, வட சென்னை 2 போன்ற படங்களும் லைன் அப்பில் உள்ளன.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் பா.இரஞ்சித் இயக்கும் சார்பட்டா 2 படத்தின் அப்டேட் சர்ப்ரைஸாக வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும், டுவிட்டரில் வட சென்னை 2 டிரெண்டானது.  ஏனெனில், வடசென்னை முதல் பாகம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதன் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகாததால் ரசிகர்கள் அப்செட்டில் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  இதில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.  இந்த விழாவில் ரசிகர்கள் வட சென்னை 2 அப்டேட் கேட்டு கத்தி ஆர்ப்பரித்து வந்தனர்.  ரசிகர்களின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்ட வெற்றிமாறன் அவர்களுக்காக அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார்.

அதன்படி விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் ரிலீஸ் ஆன பின்னர் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்த வெற்றிமாறன், வாடிவாசல் படத்தை முடித்ததும் வட சென்னை 2 படத்தின் ஷூட்டிங்கை தொடங்குவேன் என தெரிவித்தார்.  அவர் கொடுத்த இந்த அப்டேட்டால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் அவருக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க:  புதிய நடிகர் சங்க கட்டிடம்... விஜயகாந்த் பெயர் வைக்க கோரிக்கை!!!