ஜெய்பீம் பட விவகாரம்.. நடிகர் சூர்யாவுக்கு எதிரான வழக்கு ரத்து!!

ஜெய்பீம் பட விவகாரம்.. நடிகர் சூர்யாவுக்கு எதிரான வழக்கு ரத்து!!

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

புண்படுத்தும் வகையில் படம் இருந்ததாக புகார்

நடிகர் சூர்யா நடித்து, ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படத்தில், ஒரு சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில், காட்சிகள் அமைக்கப்பட்டதாக கூறி தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க கோரி சந்தோஷ் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு

மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், கடந்த 2021 டிசம்பர் 8ல் மனுதாரர் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வேளச்சேரி போலீசார், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.

உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்

இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில், இந்த புகாரை தாக்கல் செய்யும் முன்பே படத்தில் காலண்டர் இடம்பெற்றுள்ள சர்ச்சை காட்சி நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டிகாட்டினர்.

வழக்கை ரத்து செய்து உத்தரவு

வன்னிய சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி சதிஷ் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இருதரப்பு சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி சதிஷ் குமார், நடிகர் சூர்யா மற்றும் ஞானவேலுக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.