லைக்கா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம்...! நடிகர் விஷாலுக்கு எதிரான வழக்கு...!

லைக்கா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம்...! நடிகர் விஷாலுக்கு எதிரான வழக்கு...!

திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம், நடிகர் விஷாலுக்கு எதிராக தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம், அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. 

நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் பட தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து 21 கோடியே 29 லட்ச ரூபாயை கடனாக பெற்றுள்ளார். அதனை லைக்கா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இதற்காக கடன் தொகையை முழுவதுமாக செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும், லைக்கா நிறுவனத்திற்கு வழங்குவதாக உத்திரவாதம் அளித்து நடிகர் விஷாலும், லைக்கா நிறுவனமும் ஒப்பத்தமிட்டுக்கொண்டனர். 

இந்த நிலையில், கடனை திருப்பி செலுத்தாமல் இருந்த நடிகர் விஷாலின் , ' வீரமே வாகை சூடும்' திரைப்படத்தை வெளியிட தடைகோரி லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  15 கோடி ரூபாயை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் 3 வாரங்களில் வங்கியொன்றில் நிரந்திர வைப்பீடாக டெபாசீட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. 

முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது,  சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது இந்த வழக்கு நீதிபதி எம். சுந்தர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் தாக்கல் செய்யவில்லை என லைக்கா நிறுவனம் சார்பில் புகார் கூறப்பட்டது. இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு,  நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், அந்த வழக்கு அடுத்த மாதம் தான் விசாரணைக்கு வரவுள்ளதால், இந்த மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென கோரப்பட்டது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லைக்கா நிறுவனம், பிரமானபத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இரு அமர்வு விசாரணைக்கு பிறகு, விசாரிப்பதாக கூறி, அக்டோபர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.