புர்கா அணிந்து படம் பார்க்க சென்ற சாய் பல்லவி..படம் எப்படி இருக்கிறது என கேட்ட யூடிப்பர்.. வைரல் வீடியோ
ஷ்யாம் சிங்கா ராய்' படத்தினை புர்கா அணிந்துகொண்டு நடிகை சாய் பல்லவி தியேட்டரில் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரேமம் படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்தவர் சாய் பல்லவி. மாரி 2, என் ஜி கே, பாவ கதைகள் போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
சாய் பல்லவி நடித்துள்ள 'ஷ்யாம் சிங்கா ராய்' கடந்த 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகியுள்ளது. நானி இரட்டைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ்,கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளிலும் வெளியாகி 5 நாட்களில் தெலுங்கில் மட்டுமே 24 கோடி ரூபாய் வசூலைக் குவித்தது.
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராடுக்களைக் குவித்துவரும் இப்படத்தினை நடிகை சாய் பல்லவி, இயக்குநர் ராகுல் சங்ரித்யனுடன் புர்கா அணிந்துகொண்டு ஹைதராபாத்திலுள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து ரசித்துப் பார்த்துள்ளார். படம் முடித்து புர்கா அணிந்து கொண்டு சாய் பல்லவி வெளியே வந்தபோது, அவரிடமே ஊடகவியலாளர் ஒருவர் படம் எப்படி இருக்கிறது என்றார். அதற்கு சாய்பல்லவியோ தலையில் கை வைத்து சிரித்துக் கொண்டு நடந்து செல்கிறார்.
ஆனால், புர்கா அணிந்திருந்ததால் சாய் பல்லவியை ரசிகர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
#SaiPallavi Surprise Visit Sriramulu Theater