சிரஞ்சீவிக்கு 'நோ' மகேஷ்பாபுவுக்கு 'யெஸ்' சொன்ன சாய்பல்லவி!! இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய அதிரடி முடிவு...!

சிரஞ்சீவிக்கு 'நோ' மகேஷ்பாபுவுக்கு 'யெஸ்' சொன்ன சாய்பல்லவி!! இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய அதிரடி முடிவு...!

தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. நடிப்பு மட்டுமின்றி, நடனத்திலும் சிறந்து விளங்கும் சாய்பல்லவி தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.   

இதற்கிடையில் தமிழ் திரையுலகிலும் தனது நடிப்பை வெளிபடுத்திய சாய்பல்லவி, என் ஜி கே மற்றும் மாறி2 உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். கொஞ்சம் கூட கவர்ச்சி காட்டாமல் குடும்பபாங்கான கதைகளில் நடித்து வரும் சாய் பல்லவியை தமிழில் அதிக படங்கள் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் திரைப்படத்தில் தங்கையாக நடிக்க முடியாது என்று கூறிய சாய்பல்லவி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுக்கு தங்கையாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் அஜித் மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் உருவான ’வேதாளம்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அஜித் கேரக்டரில் சிரஞ்சீவி நடித்து வரும் நிலையில் லட்சுமி மேனன் கேரக்டரில் நடிக்க சாய்பல்லவியிடம் தான் படக்குழுவினர் முதலில் அணுகினர். ஆனால் அவர் தங்கை கேரக்டரில் நடிக்க முடியாது என்று மறுத்ததாகவும், இதனையடுத்தே அந்த கேரக்டரில் தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.

இந்த சமயத்தில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தில் மகேஷ்பாபு தங்கையாக நடிக்க சாய்பல்லவி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. முதலில் இந்த படத்தில் நடிக்க சாய்பல்லவி யோசித்ததாகவும், ஆனால் திரிவிக்ரம் படத்தை தவற விடக்கூடாது என்ற காரணத்தினால் அவர் ஒப்புக் கொண்டதாகவும் தகவல் கூறப்படுகிறது.

இந்நிலையில், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளாத சாய்பல்லவி, மகேஷ் பாபுக்கு தங்கையாக நடிப்பதற்கு ஒப்புக்கொண்டது தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.