பிரம்மாண்டமாக வெளியானது பொன்னியின் செல்வன் -1 டீசர்...!!!

பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் -1 ன் டீசர் இன்று மாலை 6 மணி அளவில் வெளியானது. 

பிரம்மாண்டமாக வெளியானது பொன்னியின் செல்வன் -1  டீசர்...!!!

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன்- 1 திரைப்படம் பல நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம். 1950 களில் ஒரு பத்திரிகை தொடராக வெளிவந்த கல்கியின் புகழ்பெற்ற நாவல் தான் பொன்னியின் செல்வன். இந்த நாவலை அடிப்படையாக கொண்டு தான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம். முன்னதாக இந்த பொன்னியின் செல்வன் கதையை படித்து வியந்த எம்.ஜி.ஆர், அதனை படமாக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அது நடக்கவில்லை. மேலும் இதே போன்று நடிகர் கமல்ஹாசனும் இந்த படத்தை இயக்க முயற்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லைக்கா ப்ரோடக்ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றனர். மேலும் அவர்களின் கதாபாத்திரம் குறித்த தகவல்களையும் படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் நந்தினி தேவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சரத்குமார் பெரிய பழுவேட்டரையராகவும் மற்றும் பார்த்திபன் சின்னப் பழுவேட்டரையராகவும் நடித்துள்ளனர்.   

தமிழ், தெலுங்கு, ஹிந்தி,மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில்  வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று (ஜூலை 8 ) சென்னை டிரேட் சென்டரில் நடைப்பெற்று அதன் பிரம்மாண்ட டீசர் வெளியானது.

பொன்னியின் செல்வன் கதைக்களம் நகரும் இடத்தின் வரை படம் வைத்துத் தொடங்கும் இந்த டீசரில், போர் குறித்த கதையே வெளிப்படுத்தப்படுகிறது. இரு பெண்கள் ஒரு சாம்ராஜ்ஜியத்தை எப்படி மாற்றியமைக்க முடியும் என்பது பற்றிய சிறப்பான கதையான பொன்னியின் செல்வனின் இரு துருவங்களாக நந்தினி தேவியும் குந்தவையும் இருக்கின்றனர். தனது சாம்ராஜ்ஜியத்தைக் காக்க போராடும் குந்தவையாக த்ரிஷா நடித்திருக்க, அதே நேரத்தில் அந்த சாம்ராஜ்ஜியத்தில் தனது பழி வாங்கும் விஷத்தைக் கக்கும் நந்தினி தேவியாக நடித்திருக்கிறார் ஐஸ்வரியா ராய் பச்சன். இருவரது எதிர்மறை காட்சி, தான் இந்த டீசரை அள்ளி உண்டதாக ரசிகர்கள் உச்சி முகர்ந்து வருகின்றனர்.

முன்பே வந்தியத்தேவனின் கதாபாத்திரத்தை ஒட்டி உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் தான், 2010இல் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தின் தூதுவன் கதாபாத்திரம். இரண்டிலும் கார்த்தி தான் நடித்திருக்கிறார் என்பதால், அவரது திரைத் தோற்றத்திற்காக ரசிகர்கள் வெகு ஆர்வமாகக் காத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், ரசிகர்களுக்கு பாகம் 1இல் அனைத்து கதாபாத்திரங்களின் நடிப்பை பார்க்க ஆர்வமாகக் காத்து வருகின்றனர்.