செய்தியாளர்களை சந்தித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி : திருமணத்திற்கு வாழ்த்தியவர்களுக்கு நன்றி !!
தங்கள் திருமணத்திற்கு வாழ்த்தும் ஆசிகளும் வழங்கிய அனைவருக்கும் நடிகை நயன்தாரா விக்னேஷ்சிவன் ஜோடி நன்றி தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கடந்த 9 ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ்சிவன், நடிகை நயன்தாராவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக திருப்பதியில் திட்டமிடப்பட்ட திருமணம், அனுமதி கிடைக்காததால் சென்னையில் நடைபெற்றது. அதையடுத்து நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருவரும் சுவாமி தரிசனம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடிகை நயன்தாரா - விக்னேஷ்சிவன் ஜோடி செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் பேசிய நடிகை நயன் தாரா, தங்களது திருமணத்திற்கு வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய விக்னேஷ்சிவன், தங்களது வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்கி வருபவர்களுக்கு நன்றி என்று தெரிவித்தார்.
நயன்தாராவை முதன் முதலில் இந்த விடுதியில் சந்தித்து தாம் கதை சொல்லியதாக விக்னேஷ் சிவன் நினைவு கூர்ந்தார். மேலும் ஊடங்கங்களின் ஆதரவு தங்களுக்கு எப்போதும் தேவை என நயன்தாரா விக்னேஷ்சிவன் தம்பதியர் கேட்டு கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் வந்த போது அவர்களை படம் பிடிக்க புகைப்படக்காரர்கள் போட்டி போட்டு கொண்டனர். அப்போது புகைப்படம் எடுத்த ஒருவர் தவறி விழுந்ததை கண்டு நடிகை நயன்தாரா பதறி துடித்ததாக கூறப்படுகிறது.