முதல் படமே பல மொழிகளில் வெளியாகிறதா ? நாயகி வெளியிட்ட அப்டேட்
தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி வரும் முதல் படமே பல மொழிகளில் வெளியாவதாக அப்படத்தின் ஹீரோயின் ஊர்வசி ரவ்தெலா தெரிவித்துள்ளார்
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அவரது கடை தொடர்பான விளம்பரங்களில் நடித்து வந்தார். அவரது தோற்றத்தையும், பாவனையையும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர்.
இந்த படத்தில் லெஜண்ட் சரவணன் உடன் யோகிபாபு, ரோபோ ஷங்கர், மயில்சாமி, பிரபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். அதே போல, இந்த படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலா நடிக்கிறார். லெஜண்ட் சரவணன் படத்தில் நடிப்பதன் மூலம் ஊர்வசி ரவ்தெலா தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.
இப்படத்தின் ஆரம்பக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கொரோனா நெருக்கடியால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. இடையில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்ததால், மீண்டும் படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து தொடங்கிய இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் நடிகை ஊர்வசி ரவ்துலா. அதன்படி சென்னையில் நடைபெற்று வந்த இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக பதிவிட்டுள்ள அவர், படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.