15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திர விழா...!!

15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திர விழா...!!

சீர்காழி அருகே பூம்புகாரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கொற்றவை பந்தலில் சித்திரை முழு நிலவு இந்திர விழா கோலாகலமாக நடைபெற்றது. 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலமான பூம்புகாரில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று சித்திரை முழு நிலவு விழா (இந்திர விழா) நடைபெறுவது வழக்கம். பன்னெடுங்காலமாக நடைபெற்று வந்த இவ்விழா மழைக்கு தலைவனான இந்திரனை  வணங்குவதாக அமைந்துள்ளது. சிலப்பதிகாரத்தில் இவ்விழா பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. பண்டைய காலத்தில் இவ்விழா தடைபட்டதால் பூம்புகார் கடல் கோளால் அழிந்ததாகவும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பாக இவ்விழா நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக இந்திர விழா நடத்தபடாமல் தடைபட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இந்திர திருவிழாவை நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று இரவு சித்திரை முழு நிலவு (இந்திர திருவிழா) வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதையும் படிக்க"கேரளா ஸ்டோரி" தடை செய்ய சீமான் வலியுறுத்தல்...!!:

கொற்றவை பந்தலின் அருகே நடைபெற்ற விழாவில் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. குறிப்பாக தப்பாட்டம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, கிராமிய ஆடல் பாடல் நிகழ்ச்சி, சிலப்பதிகார நாட்டிய நாடகம், பொம்மலாட்ட கலைஞர்களின் சிலப்பதிகார கதை உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற விழாவில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் திரளான சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் சான்றிதழ்களுடன் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.