புஷ்பா 3 எடுக்க வாய்ப்புகள் உள்ளது என இயக்குனர் கூறினார்- ஃபகத் ஃபாசில்:
2021ம் ஆண்டு, ஒடிடி தளத்தில் வெளியானாலும், உலக அளவில் ரசிகர் கூட்டத்தைப் பெற்றதோடு, மாபேரும் வசூல் வேட்டை ஆடியது. அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், அஜய் கோஷ், ஜ்கதீஷ் பிரதாப், மைம் கோபி, ஷத்ரு, தனஞ்செய், ஹரிஷ் உத்தமன், சுனில் உட்பட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மேலும், இந்த படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆக இருக்க, ஓ சொல்றீயா மாமா என்ற பாடல் உலக அளவில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
இரண்டு பாகங்களாக வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் பாகமான புஷ்பா தி ரைஸ் படம், ஓடிடி தளத்தில் வெளியானது. யாரும் எதிர்பாராத வகையில், புஷ்பா என்ற முற்றிலும் வித்தியாசமான ஒரு தோற்றத்தில் நடித்திருந்த அல்லு அர்ஜுன், ரசிகர்கள் கவனத்தை எவ்வளவு ஈர்த்தாரோ, அந்த அளவுக்கு, ஏன், அதனையும் விட அதிகமான கவனத்தை ஈர்த்தது வில்லன் கதாபாத்திரமான ஃபகத் ஃபாசில் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
தற்போதைய மிகச் சிறந்த மலையாள நடிகர்களில், ஒருவராக இருக்கும் ஃபகத் ஃபாசிலுக்கு, இந்த கொரோனா காலம் தொடங்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்தது என்றே சொல்லலாம். ஓடிடி தளங்கள் மூலம் உலக சினிமாக்களைக் கண்டு களித்த மக்கள், மலையாள படங்கள் அதிகமாக பார்த்ததற்கு ஒரு முக்கிய காரணம் இவரும் தான். அந்த வகையில், பான் இந்திய படமான புஷ்பா தி ரைஸ் படத்தில் ஒரு வட இந்திய காவலராக நடித்த ஃபகத்-க்காக மட்டுமே தனி ரசிகர் கூட்டம் உறுவானது. மொட்டை அடித்த காவலர், புஷ்பா போன்றவனையே ஆட்டி வைக்கும் அளவிற்கான அந்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருந்தார் ஃபகத்.
முதல் பாகத்தில் மிக சிறிய திரை நேரம் கொண்ட ஃபகத் தான் இரண்டாம் பாகத்தில் முழுமையாக இருக்க போகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது, புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார், புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் உருவாக வாய்ப்புகள் இருப்பதாகத் தன்னிடம் கூறியதாக ஃபகத் ஃபாசில் கூறியுள்ளார்.
தனது சமீபத்திய படமான ‘மலயன்குஞ்சு’ என்ற படத்திற்கான ப்ரமோஷன்களில் ஈடுபட்டு வரும் ஃபகத், தனது முதல் மாபெரும் படமான புஷ்பா படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து ஃபகத் பேசிய போது, இந்த படத்தை ஒரு வெப் சீரியசாக உருவாக்கவே இயக்குனர் யோசித்ததாகவும், இறுதியில், கதையின் வரவேற்பினால், இரண்டு பாகங்கள் கொண்ட படமாகவும் உருவாக்கியதாக தெரிவித்தார். மேலும், படத்தின் வெற்றியைத் தொடர்ந்தும், ஃபகத்-இன் கதாபாத்திரத்திற்கான வரவேற்பை தொடர்ந்தும், புஷ்பா 3 உருவாக்க வாய்ப்புகள் இருப்பதாக இயக்குனர் தெரிவித்தார் என அவர் கூறினார்.
ஜூன் மாதம் வெளியான விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஃபகத், தற்போது பல வகையான வித்தியாசமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதோடு, ஹீரோவாக மட்டுமல்ல, வில்லனாகவும் நடிக்க முடியும் என்பதனை வெளிப்படையாகக் காட்டி வருகிறார்.
கோலிவுட்டிற்கு, விஜய் சேதுபதி எப்படியோ, அதே போல மாலிவுட்டிற்கு ஃபகத் என்று கூறுவது எவ்விதத்திலும் குறைவு இல்லை. இந்த நிலையில், புஷ்பா 2- தி ரூல் படத்தில், விஜய் சேதுபதியும் இணையவுள்ளதாக சில தகவல்கள் கூறுவதால், ரசிகர்கள் இந்த படத்திற்காக மிக ஆர்வமாகக் காத்து வருகின்றனர்.