ஆர்.கே.செல்வமணி பிடிவாரண்டை திரும்பப் பெற்ற நீதிமன்றம்!

அவதூறு வழக்கு விசாரணையில் சரணடைந்ததை அடுத்து சினிமா இயக்குனர் ஆர். கே.செல்வமணிக்கு  எதிராக பிறப்பித்த பிடி வாரண்ட்டை திரும்பப் பெற்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு இயக்குனர் ஆர். கே.செல்வமணி  தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார் அதில் பைனான்ஸ்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதையடுத்து செல்வமணி மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை போத்ரா தொடர்ந்தார்.

போத்ரா இறந்த பின்னர், இந்த வழக்கை அவரது மகன் ககன் போத்ரா நடத்தி வருகிறார். இந்த வழக்கு 15 வது மாஜிஸ்திரேட்டு முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. 

அப்போது ஆர். கே.செல்வமணி நேரில் ஆஜராக வில்லை. அவர் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகாததால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறபித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து ஜார்ஜ் டவுன்  15 வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்ற நீதிபதி சுமதி முன்பு இன்று ஆர். கே. செல்வமணி நேரில் ஆஜரானார். அப்போது செல்வமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நர்மதா சம்பத், நீதிமன்றம் பிறப்பித்த பிடி வாரண்ட் உத்தரவை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்தார்.

இதனை ஏற்ற நீதிபதி பிடி வாரண்ட் உத்தரவை திரும்ப பெற்று உத்தரவிட்டு விசாரணை நவம்பர் 3 தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிக்க: "ரயில் இயக்கத்தை தடுத்தால் 4 ஆண்டு சிறை" மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை!