போலீசாருக்கு தண்ணி காட்டும் நடிகை மீரா மிதுன்...! லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பவிருக்கும் காவல்துறை..!

போலீசாருக்கு தண்ணி காட்டும் நடிகை மீரா மிதுன்...!  லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பவிருக்கும் காவல்துறை..!

பட்டியலினத்தோரை அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் தலைமறைவாக இருந்து வருகிறார். 

8 தோட்டாக்கள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் நடிகை மீரா மிதுன். கடந்த ஆண்டு பட்டியலினத்தோரை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் நடிகையான மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் சியாம் அபிஷேக் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இருவரும் ஜாமின் பெற்ற நிலையில், இவ்வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடைபெற்றது. 

அப்போது விசாரணைக்கு நடிகை மீரா மிதுன் ஆஜராகாமல் தவிர்த்து வந்ததால் அவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற்ற போது நடிகை மீரா மிதுன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதாகவும், அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல அவர் எங்குள்ளார் என்பது குறித்து தெரியவில்லை எனவும் அவரது குடும்பத்தாரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் மீரா மிதுன், மீது லுக் அவுட் நோட்டீஸ் வழங்கவுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மீரா மிதுனுக்கு ஜாமின் உறுதிமொழி மற்றும் பிணைத் தொகை கொடுத்த நபர்கள் மீது அடுத்தகட்டமாக சம்மன் அனுப்பி விசாரிக்கவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனு அளிக்கப்படும் என சென்னை காவல்துறை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி தலைமறைவாக உள்ளதாக போலீசார் சார்பில் கூறப்படும் தனது மகள் மீரா மிதுன் கடந்த சில நாட்களாக காணவில்லை எனவும், அவரை கண்டுபிடித்துத் தருமாறும் அவரது தாயார் சியாமளா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : பொய்யான செய்திகளை பரப்பி வரும் திமுக அரசு...அடுக்கடுக்காக குற்றம் சுமத்திய ஈபிஎஸ்!