வேலூர் : " கோப்புகளில் தமிழ்மொழியை அதிகம் பயன்படுத்த வேண்டும்..." - மாவட்ட ஆட்சியர்

வேலூர் : " கோப்புகளில் தமிழ்மொழியை அதிகம் பயன்படுத்த வேண்டும்..." - மாவட்ட ஆட்சியர்

வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் இரண்டு நாட்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று தமிழ் குறித்து நடத்தப்பட்ட கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, கவிதை போட்டி ஆகியவைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் தமிழ்த்துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில், அதிகாரிகள் தமிழில் பேச வேண்டும், அதே போன்று அலுவலக கோப்புகளிலும் தமிழ் மொழியை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் அவ்வாறு அனைத்துறைகளிலும் செய்தால் எந்ததுறையில் அதிக அளவிலான கோப்புகளில் தமிழ் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அத்துறைக்கு பரிசுகள் வழங்கப்படும் என கூறினார். 

பின்னர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற வடகிழக்கு பருவ மழை ஆலோசனை கூட்டத்தில், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மழையின் போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்றும் ஏரி, கால்வாய்களை தூர்வாரி ஏரிகளுக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.