தேனி : சிறுமிகளின் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்...!

தேனி : சிறுமிகளின் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்...!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணைப்புரம் பேரூராட்சியில் சுபஸ்ரீ, நிகிதா ஸ்ரீ என்ற இரு குழந்தைகள் பாவலர் தெருவில் உள்ள பெண்கள் பொது கழிப்பிட செப்டிக் டேங்க் தொட்டியில் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து இன்று இரு குழந்தைகளின் உடல்களும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் சொந்த ஊரான பண்ணைப்புரம் பேரூராட்சிக்கு அடக்கம் செய்ய கொண்டு வந்தனர்.

பேருந்து நிலையத்தில் கூடியிருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக பராமரிக்காமல் கிடப்பில் போடப்பட்டிருந்த கழிப்பறை கட்டிடத்தினால் தான் விபத்து ஏற்பட்டது என புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தற்போது விபத்து நடந்தும் இதுவரை பேரூராட்சி நிர்வாகத்தினர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என உறவினர்களும், பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் சாலை மறியல் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து இறந்த சிறுமிகளின் உடலை நல்லடக்கம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.