தீபாவளி பண்டிகையால் களைகட்டிய ஆட்டு சந்தை...! ஆடுகள் விற்பனை மும்முரம்...!

தீபாவளி பண்டிகையால் களைகட்டிய ஆட்டு சந்தை...!  ஆடுகள் விற்பனை மும்முரம்...!

தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தைகளில் மிகவும் முக்கியமான சந்தை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் ஆட்டுச்சந்தை. வாரம் தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தைக்கு மதுரை, சென்னை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்  ஆடுகளை வாங்க வியாபாரிகள் வருவது வழக்கம். வழக்கமாக வாரம் தோறும் 2 கோடி ரூபாய் வரையிலும், பண்டிகை காலங்களில் 4 கோடி ரூபாய் வரையிலும் ஆடுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையால் எட்டயபுரத்தில் இன்று நடைபெற்ற  ஆட்டுச்சந்தை களை கட்டியது. நாளை மறுநாள் தீபாவளி என்பதால் விற்பனைக்காக அதிகளவில் ஆடுகள் கொண்டு வரப்பட்டு இருந்தது. 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. விலையும் கடந்த வாரங்களை விட சற்று குறைவாக இருந்த காரணத்தினால் வியாபாரிகள் ஆர்வமுடன் ஆடுகளை வாங்கி சென்றனர். 7 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை ஆடுகள் எடைக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் 6 கோடி ரூபாயக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு 7 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.