“வருவாயை அதிகரிக்க தமிழ்நாடு ஹோட்டல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது..”- சுற்றுலாத்துறை அமைச்சர்

“வருவாயை அதிகரிக்க தமிழ்நாடு ஹோட்டல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது..”- சுற்றுலாத்துறை அமைச்சர்

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் புதுபிக்கப்பட்ட உணவகத்தை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் அங்குள்ள வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மதிவேந்தன், முதல்வரின் உத்தரவிற்கிணங்க தமிழ்நாடு ஹோட்டல்களை புதுப்பித்து வருவதாக தெரிவித்தார். தமிழ்நாடு ஹோட்டல்களை புதுப்பிப்பதால் வருவாயை அதிகரிக்க கூடும் என தெரிவித்த அவர், புதுப்புது உணவுகளையும் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்தார். தனியார் ஹோட்டல்களுக்கு நிகராக தமிழ்நாடு ஹோட்டல்களையும் புதுப்பித்து வருவதால் அதிகமான வருவாயை ஈட்டக்கூடிய நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.  

சுற்றுலா தள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 15 இடங்களை தேர்வு செய்து அங்கு வெவ்வேறு புதிய வசதிகளை செய்ய உள்ளதாக தெரிவித்தார். அதன்படி கொல்லிமலை, ஜவ்வாது மலை, ஏலகிரி உட்பட சில ஏரிகள், அணைகள், ஒகேனக்கல் பூம்புகார் ஆகியவற்றை புதுப்பித்து வருவதாக தெரிவித்தார். மேலும் பொள்ளாச்சியில் தமிழ்நாடு அரசு நடத்தும் பலூன் திருவிழா நடக்கவிருக்கும் இடங்களை ஆய்வு மேற்கொள்வதாக தெரிவித்த அவர், இதுவரை தனியார் பங்களிப்புடன் நடைபெற்று வந்த பலூன் திருவிழா இம்முறை தமிழக அரசு முன்வந்து நடத்துவதாகவும் இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் பலூன் திருவிழா நடக்கவிருக்கும் இடத்தினை ஆய்வு மேற்கொள்ள சென்றார்.

இதையும் படிக்க : “நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும்..” - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர்