இறந்தவரின் உடலை வயல்வெளிகளில் கொண்டு செல்லும் உறவினர்கள் ..! சாலை வசதி அமைத்துத்தர கோரிக்கை...!

இறந்தவரின் உடலை வயல்வெளிகளில் கொண்டு செல்லும் உறவினர்கள் ..! சாலை வசதி அமைத்துத்தர கோரிக்கை...!

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோவிஞ்சம்பட்டி கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இவர்களுக்கான மயானம் உள்ளது. இந்த மயானத்திற்கு செல்ல சுமார் 80 ஆண்டுகளுக்கும்  மேலாக பாதை வசதி இல்லாததால் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வரை வயல்வெளிகளில் இறங்கி இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்லும் அவல நிலை தற்போது வரை நீடித்து வருகிறது.

இந்நிலையில் இன்று அந்தப் பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை அவரது உறவினர்கள் வயல்வெளிகளில் எடுத்துச் செல்லும் காட்சி காண்போரை வேதனையடையச் செய்துள்ளது. மேலும் இந்த மயானத்திற்கு பாதை வசதி ஏற்படுத்தி கொடுக்க கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர். இப்பகுதி மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட மயானத்திற்கு சாலை வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.