பென்சில் முனையில் பொன்னியின் செல்வன்...! தத்ரூபமாக செதுக்கிய நுண்கலை கலைஞர்...!

பென்சில் முனையில் பொன்னியின் செல்வன்...! தத்ரூபமாக செதுக்கிய  நுண்கலை கலைஞர்...!

தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய ராஜ ராஜ சோழனின் உருவத்தை பென்சில் முனையில் தத்ரூபமாக செதுக்கி அசத்தி உள்ளார். தஞ்சையை சேர்ந்த நுண்கலை கலைஞர் சபித்ரு. தஞ்சையில் வசித்து வரும் இவர் சிறு வயதிலிருந்தே நுண்கலை மீது அதீத ஆர்வம் கொண்டிருந்தவர். பின்னர்  ஆடை வடிவமைப்பில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் சாக்பீஸ், சோப் போன்றவற்றில் சிலைகளை வடிவமைத்த அவர் பொன்னியின் செல்வன் நாவல் படித்து ராஜராஜ சோழன் வரலாறு அறிந்து, பெரியக் கோவிலின் கட்டட மற்றும் சிற்ப அழகினை கண்டு வியந்து உள்ளார்.

பின்னர், ராஜராஜ சோழனின் முக வசீகரம், கம்பீர தோற்றம், இவற்றை கண்டு அசந்து ஆச்சர்யப்பட்ட சபித்ரு பென்சில் முனையில் ராஜராஜ சோழனாகிய பொன்னியின் செல்வன் உருவத்தை செதுக்க ஆரம்பித்தார். 21 நாட்கள், அங்குலம் அங்குலமாக ரசித்து சிலைக்கு உயிரோட்டமான உருவம் கொடுத்துள்ளார். தத்ரூபமாக ராஜராஜன் உருவத்தை வடிவமைத்துள்ள  சபித்ரு 10 ஆண்டுகளில் தேசிய தலைவர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், பறவைகள், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் படுகொலை என 500க்கும் மேற்பட்ட சிலைகளை பென்சில் முனையில் வடிவமைத்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், தனது படைப்புகளை காட்சிப்படுத்தி இளைய தலைமுறையினர் அறிந்து இக்கலையை கற்று கொள்ள வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார்.