நெல் காத்த நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்...

நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நெல் காத்த நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்...

நெல்லை | பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் அமைந்துள்ள தாமிரசபையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நடராஜர் திருத்தாண்டவமாகிய ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கி.பி.,ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தரால் ‘திருநெல்வேலி பதிகம்’ பாடல்பெற்றது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில். இங்கு ஆடவல்லானின் ஆருத்ரா தரிசனம் நடக்கும் பஞ்ச சபைகளில் தாமிரசபை அமைந்துள்ளது.

சிறப்பு பெற்ற இத்திருக்கோயிலில் கடந்த 28 ம்தேதி அன்று மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மார்கழி திருவாதிரைத் திருவிழாவை முன்னிட்டு 10 நாட்கள் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தினமும் அதிகாலை திருவெம்பாவை வழிபாடு நடைபெற்றது.

விழாவின் 10ம் நாளான இன்று தாமிர சபையில் சிவபருமான் நடனக்காட்சியான ஆருத்ரா தரிசனம் அதிகாலையில் நடைபெற்றது. ஸ்ரீ தாமிர சபையில் இன்று நடராஜ பெருமானுக்கு 1.00 மணி அளவில் திருமஞ்சனம், அதிகாலை 3.15 மணிக்கு பசு தீபாராதனை நடைபெற்றது.

அதனை தொடா்ந்து தாமிர சபையில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் நடராஜருக்கு சிறப்பு நடன தீபாராதனை நடைபெற்றது. ஓதுவாமூா்த்திகள் திருவெம்பாவை பாடல்களை இசையுடன் பாடினா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நடராஜர் திருநடனக் காட்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் - புகைப்படங்கள்