பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்பாட்டம்...!

திருச்சி மாவட்டத்தில் உரதட்டுப்பாடு மற்றும்  காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிப்புக்கு உள்ளான வாழை விவசாயிகளுக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.  

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்பாட்டம்...!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை விவசாயிகள் அளித்தனர்.

அதேசமயம் திருச்சி மாவட்டத்தில் வேளாண் விற்பனை மையங்களில் யூரியா, பொட்டாசியம் மற்றும் உரங்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைக்காததாலும், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரையிலும் இழப்பீடு வழங்கப்படாததை கண்டித்தும் இன்று தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் உரசாக்குகளை கையில் ஏந்தியபடியும், அழுகிய வாழை மரங்களை கையில் வைத்துக் கொண்டு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

மேலும் ஒரு ஏக்கர் நெல்லுக்கு  ரூ.30,000, வாழைக்கு 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், கரும்பு டன்னுக்கு ரூ.4000 வழங்க வேண்டும் என்றும் 17 சதவீதம் ஈரப்பதம் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற உணவுத்துறை அமைச்சரின் அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும் இதனை மாற்றி 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் எனவும் விவசாய சங்க மாநிலச் செயலாளர் கேட்டுக் கொண்டார்.