ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள்...! பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை...!

ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள்...! பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை...!

கர்நாடகாவிலிருந்து இடம் பெயர்ந்த யானைகள் கூட்டம், தமிழக எல்லையான ஒசூர் அடுத்த ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் 100க்கும் மேற்பட்ட யானைகள், தமிழக எல்லையான ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வழியாக ஓசூர் வனச்சரக பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான இடம்பெயர்வாக கர்நாடகாவிற்கு நேற்று 40 யானைகள் ஜவளகிரி வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன.

கர்நாடகாவிலிருந்து இடம் பெயர்ந்த, 40க்கும் மேற்பட்ட யானைகள், ஜவளகிரி வனச்சரகத்தில் தற்போது தஞ்சமடைந்துள்ளன. இதில், ஜவளகிரி காப்புக்காட்டில் ஏற்கனவே 10 யானைகள் உள்ள நிலையில் அவற்றை, வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் 25 பேர் கொண்ட குழுவினர் கண்காணித்து வருகின்றனர். வனத்தையொட்டிய கிராமங்களில் ராகி பயிர் அதிகளவில் சாகுபடி செய்துள்ளதால், யானைகளால் அவை சேதமாக அதிக வாய்ப்புள்ளது.

அதனால், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு யானைகளை இடம்பெயரவிடாமல், மீண்டும் கர்நாடகாவுக்கு விரட்டும் முயற்சியில், வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.