பழனியில் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை... வருவாய் என்ன?!

பழனியில் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை... வருவாய் என்ன?!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு  தண்டாயுதபாணி  சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.  இவ்வாறு வரும் பக்தர்கள் மலை மீது சென்று  சுவாமி தரிசனம் செய்யும் போது காணிக்கை செலுத்துவதற்க்கு வசதியாக மலையடிவாரம் பாதவிநாயகர் கோவில் முதல் மலைகோவில் வரை பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. 

நிறைந்த உண்டியல்:

இந்நிலையில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கைகளால் நிறையும் உண்டியல்கள்   திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம்.  சமீபத்தில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்திருவிழா நடைபெற்று நிறைவடைந்த நிலையில் உண்டியல்கள் நிறைந்ததை அடுத்து, உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. மூன்று நாட்களாக நடைபெற்ற உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் ரொக்கமாக 7கோடியே  17லட்சத்து 42ஆயிரத்து  126ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 1கிலோ 248கிராமும், வெள்ளி 48கிலோ ஆயிரத்து 277கிராமும், வெளிநாட்டு கரன்சி 2529நோட்டுகளும் வருவாயாக கிடைத்துள்ளது. 

நிறைவுபெற்ற பணி:

இதனைத் தொடர்ந்து உண்டியல் எண்ணும் பணி நிறைவுபெற்றதாக திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், மற்றும்  தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.  உண்டியல் எண்ணும் பணி சிசிடிவி காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:  உண்டியலை திருடிச் சென்ற மர்ம நபர்... சிசிடியாவால் கைது!!!