கோவை சம்பவம் எதிரொலி...! திருவண்ணாமலை கோவிலில் பாதுகாப்பு அதிகரிப்பு...!

கோவை சம்பவம் எதிரொலி...! திருவண்ணாமலை கோவிலில் பாதுகாப்பு அதிகரிப்பு...!

திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கோவை வெடிகுண்டு சம்பவம் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் திருக்கோவிலின் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் பல லட்சம் பக்தர்கள் திருக்கோவிலுக்கு வருகை தர உள்ளனர். இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் மோப்பநாய் தென்றல் உதவியுடன் திருக்கோவிலின் ராஜகோபுரம், பக்தர்கள் கொண்டு வரும் பொருட்கள் வைக்கும் அறை, திருக்கோயில் ஐந்தாம் பிரகாரம், கோவில் கருவறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

கோவையில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவம் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் 12 நாட்களுக்கு காலையும் மாலையும் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் வரும் பக்தர்கள் பலத்த சோதனைக்கு பிறகு கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதே நகரில் மத்திய பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடம் உள்ளிட்ட இடங்களில் மோப்பநாய் தென்றல் உதவியுடன் காவல்துறையினர் சோதனை நடத்த உள்ளனர்.

இதையும் படிக்க : தரமற்ற நிலக்கடலை விதைகள் விற்பனை...! விவசாயிகள் வேதனை....!