சிறுக சிறுக பெற்ற கடன்.. ரூ.5 லட்சம் கடனுக்கு ரூ.35 லட்சம் வட்டி.. மனமுடைந்த பெண் தீக்குளித்து பலி!!
சென்னை பெரம்பூர் அருகே கந்து வட்டி தொல்லையால தீக்குளித்த பெண்மணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சித்ரா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிறுக சிறுக 5 லட்ச ரூபாய் பணத்தை, அதே பகுதியைச் சேர்ந்த ரங்கநாயகி என்பவரிடம் கடனாகப் பெற்றுள்ளார்.
ஒரு கட்டத்தில், 35 லட்சம் கட்ட சொல்லியும், வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறும், ரங்கநாயகி, அவரது கணவர் சேகர் மற்றும் மகன் சுரேஷ் உள்ளிட்டோர் கூட்டாக சேர்ந்து சித்ராவையும், அவரது இரு மகள்களையும் மிரட்டி உள்ளனர்.
இதனால், மனமுடைந்த சித்ரா கடந்த 7ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். தகவல் அறிந்து சென்ற போலீசார், சித்ராவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் சித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசின் பிரிட்ஜ் போலீஸார் ஏற்கனவே ரங்கநாயகி மற்றும் அவரது கணவர் சேகர் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.