
மேலூர் அடுத்த பல்லவராயன்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் பொன்னையன் - அழகம்மாள் தம்பதி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இதனிடையே இன்று காலை மது அருந்திவிட்டு வந்த பொன்னையனுக்கும் மனைவி அழகம்மாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மனைவி அழகம்மாள், வீட்டில் இருந்த அரிவாளால், பொன்னையனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பொன்னையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அழகம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.