மீன் ஏற்றி சென்ற வாகனம் விபத்து... தொடரும் விசாரணை!!!

மீன் ஏற்றி சென்ற வாகனம் விபத்து... தொடரும் விசாரணை!!!

திருவாடானை அருகே மீன் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருமொழி பகுதியில் மீன் ஏற்றி வந்து கொண்டிருந்த சரக்கு வாகனம் திடீரென நிலை தடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விழுந்தது.  அந்த வாகனம் 100 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு அருகில் இருந்த வீட்டின் சுவற்றில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாடானை போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் விபத்துக்குள்ளான வாகனத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ஜெயப்பிரகாஷ் (34) என்பவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். 

அதன்பிறகு இந்த வாகன விபத்தில் இறந்த புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா அய்யம்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மாரிமுத்து (45) என்பவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இந்த விபத்து குறித்து திருவாடானை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.    

இதையும் படிக்க:   இறங்கிய வேனின் சக்கரத்தில் சிக்கி மாணவன் உயிரிழப்பு....!!!