காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி...! தீர்ப்பளித்த சென்னை அமர்வு நீதிமன்றம்...!

காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி...! தீர்ப்பளித்த சென்னை அமர்வு நீதிமன்றம்...!

காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு தண்டனை வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்த வினோதினி என்பவரும், விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டியை சேர்ந்த அந்தோனி ஜெகனும் காதலித்து வந்தனர். இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வினோதினியை, அவரது பெற்றோர்,  தூத்துக்குடியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் கதிரவனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இந்த தம்பதியர் சென்னையில் வசித்து வந்த போதும், வினோதினிக்கும் அந்தோனி ஜெகனுக்கும் உள்ள உறவு தொடர்ந்தது. இந்த நிலையில்,  கடந்த 2018 அக்டோபர் 12ஆம் தேதி கணவன் கதிரவனை திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்துச் சென்ற வினோதினி, அங்கு கண்ணை கட்டி கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடியுள்ளனர். அப்படி விளையாடிகொண்டிருந்தபோது, ஏற்கனவே  வினோதினியால் வரவழைக்கப்பட்ட அந்தோனி ஜெகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கதிரவனை வெட்டியுள்ளார். இதனால் நிலைகுலைந்து கதிரவன் கீழே விழுந்தவுடன் அந்தோனி ஜெகனிடம் தனது தாலியை கழற்றி கொடுத்து அங்கிருநது ஓடிவிடும்படி வினோதினி கூறியுள்ளார்.

அந்தோனி ஜெகனும் தப்பி ஓட, தனது தாலியை பறித்துக் கொண்டு கணவனை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிவிட்டதாக வினோதினி சத்தம்போட்டுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் கதிரவனை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கதிரவன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவான்மியூர் போலீசார் கடற்கரையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது வினோதினியும் அவரது காதலனும் நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் இருவர் மீதும் கொலை மற்றும் கூட்டு சதி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தங்க மாரியப்பன், குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதாக கூறி, வினோதினி மற்றும் அந்தோனி ஜெகன் ஆகியோருக்கு  ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிக்க : போருக்கு தயாராகின்றனவா தைவானும் சீனாவும்..!!!