சாராயம் குடிக்க பணம் தர மறுப்பு... போதையில் வீட்டை கொளுத்திய கணவன்...

ஓமலூர் அருகே மதுகுடிக்க பணம் தர மறுத்ததால் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாராயம் குடிக்க பணம் தர மறுப்பு... போதையில் வீட்டை கொளுத்திய கணவன்...
சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த சம்பளகாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் குமார், பழனியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
 
இந்நிலையில் குமார் மது பழக்கத்துக்கு அடிமையானதால், அவரது மனைவி பழனியம்மாள் செங்கல் சூளையில் கூலி வேலைக்கு சென்று தனது, குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.  மேலும், மது குடிக்க பணம் கேட்ட குமாரிடம், பழனியம்மாள் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த குமார், தனது மனைவியையும், குழந்தைகளையும் வீட்டிற்குள் வைத்த அடைத்து குடிசைக்கு தீ வைத்துள்ளார்.
 
இதனால் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியது. அதிர்ச்சியடைந்த பழனியம்மாளும், மூன்று குழந்தைகளும் வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்து, உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.