வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த மகள்..தாலியை அறுத்து எறிந்து கடத்தி சென்ற தந்தை...சிகிச்சையில் காதலன்!!

காதல் திருமணம் செய்த மகளின் தாலியை அறுத்து மணமகனை தாக்கிவிட்டு மணப்பெண்ணை கடத்திச் சென்ற சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த மகள்..தாலியை அறுத்து எறிந்து கடத்தி சென்ற தந்தை...சிகிச்சையில் காதலன்!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி  பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி-கண்ணம்மாள் தம்பதியினரின் மகன் அஜித் குமார். இவர் ஐ.டி.ஐ படித்துவிட்டு மின்சார வாரியத்தில் லேபர் காண்ட்ராக்ட் வேலை பார்த்து வருகிறார். இவரும், சிங்களாந்தபுரம் அருகே உள்ள களர்க்காடு பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன்-முத்துமணி தம்பதியினரின் மகள் சுஜிதா என்பவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இவர்கள் திருமணத்திற்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்த அஜித்குமார் மற்றும் சுஜிதா இருவரும் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் திருமணம் முடிந்த கையோடு தம்பதி இருவரும் நாமக்கல் மாவட்ட காவல் நிலையத்திற்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அங்கு போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அஜீத் குமாருடன் சுஜிதாவை அனுப்பிவைத்தனர்.  

இதனையடுத்து சுஜிதாவின் பெற்றோர் அஜித்குமாரை செல்போன் மூலம் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன தம்பதி மற்றும் உறவினர்கள் அவர்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு புறப்பட்டு சென்றனர். அப்போது செல்லும் வழியில் 50-க்கும் மேற்பட்டோர் தம்பதி சென்ற காரை தடுத்து நிறுத்தி கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு கார் கண்ணாடியை உடைத்து தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் மணமகன்  அஜித்குமார் அவரது தாய்மாமன் ரவி மற்றும் சித்தி விஜயா உள்பட 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசாரிடம் மணமகன் கூறும்போது, நான் காதலித்து திருமணம் செய்து கொண்ட சுஜிதாவை அவரது பெற்றோரும் உறவினர்களும் வழிமறித்து கடுமையாக தாக்கிவிட்டு, நான் கட்டிய தாலியை அறுத்து எறிந்துவிட்டு சுஜிதாவை கடத்திச் சென்றுவிட்டனர். நான் காதலித்து திருமணம் செய்து கொண்ட சுஜிதாவை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க அவர் கூறியுள்ளார். 

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக மணப்பெண்ணின் தந்தை உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.