சொத்துக்காக தம்பி மனைவியை கொலை செய்த அண்ணன்...!

சொத்துக்காக தம்பி மனைவியை கொலை செய்த அண்ணன்...!

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள அய்யாபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் முதல் மனைவி இறந்ததால் இரண்டாவதாக தங்கம் (55) என்பவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இவர் வெளியூரில் தங்கி படித்து வருவதாக தெரிகிறது. தங்கத்தின் கணவர் நாகராஜ் கோவையில் வேலை பார்த்து வருகிறார். இவர் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வார். இதில் மனைவி தங்கம் மற்றும் அய்யாபுரத்தில் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று தங்கம் என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக புளியங்குடி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தங்கம் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, தங்கத்தை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்திய போது, தங்கத்தின் கணவரான நாகராஜின் அண்ணன் தங்கையா (59) என்பவருக்கும், தங்கத்திற்கும் நீண்ட காலமாக சொத்து பிரச்சினை இருந்தது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து, தங்கையாவை போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் விசாரணையை தீவிர படுத்தினர். ஒரு கட்டத்தில் தங்கையா, தான் கொலை செய்தது ஒப்புக்கொண்டார்.

பின்னர் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சொத்திற்காக தம்பி மனைவியை கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.