உன்னை 2-வது மனைவியாக வைத்து கொள்கிறேன்-இளம்பெண்ணின் திருமணத்தை நிறுத்திய தொழிலதிபர்...

இளம்பெண்ணின் திருமணத்தை நிறுத்திய தொழிலதிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

உன்னை 2-வது மனைவியாக வைத்து  கொள்கிறேன்-இளம்பெண்ணின் திருமணத்தை நிறுத்திய தொழிலதிபர்...

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர்  அனில்குமார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். மிகப்பெரிய தொழிலதிபரான இவர்  ஏ.சி.மெஷின் சர்வீஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார். 

இந்நிலையில், அந்த இளம் பெண்ணுக்கும், ஒரு வாலிபருக்கும் திருமணம் நடத்துவதற்காக பெற்றோர்கள் இணைந்து நிச்சயம் செய்துள்ளனர். இது குறித்து அறிந்த தொழிலதிபர் அனில்குமார் அந்த இளம்பெண்ணிடம் நீ இருந்தால் தான் என் தொழிலை சிறப்பாக கவனித்துக் கொள்ள முடியும். நீ என்னை விட்டுப் போகக்கூடாது. நான் உன்னை 2-வது மனைவியாக வைத்து கவனித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும், இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று அதையும் அனில்குமார் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து திருமணத்தை நிறுத்தவில்லை என்றால் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என அனில்குமார் இளம்பெண்ணை மிரட்டி வந்துள்ளார்.

இது குறித்து அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் தங்களது மகளுக்கு உடனடியாக திருமணம் நடத்த முடிவு செய்தனர். இதனை அறிந்த அனில்குமார் இளம்பெண்ணின் திருமணம் அன்று மணமகனுக்கு தனது செல்போனில் இருந்த வீடியோவை அனுப்பியுள்ளார். இதனால் பெற்றோர் முடிவு செய்த திருமணம் நின்றுவிட்டது. திருமணம் நின்றுவிட்டதால் இளம்பெண்ணின் வீட்டார் மிகுந்த மன உடைச்சலுக்கு ஆளாகினர்.  

பின்னர், இது குறித்து குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம்  இளம்பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான அனில்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.