நாயை குளிப்பாட்ட சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியான சோகம்!! புதுச்சேரியில் பரபரப்பு

நாயை குளிப்பாட்ட சென்ற சிறுவன் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் காரைக்காலில் அரங்கேறியுள்ளது.

நாயை குளிப்பாட்ட சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியான சோகம்!! புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வேட்டக்காரன் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் - கௌரி மனோகரி தம்பதி. இவர்களுக்கு 17 வயதில் கௌசிக் என்ற மகன் உள்ளார். அவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

இந்நிலையில் கோட்டுச்சேரியை அடுத்த திருவேட்டக்குடியில் உள்ள குளத்தில் தனது நாயை குளிப்பாட்டுவதற்காக நண்பர்களுடன் கௌசிக் சென்றுள்ளார். அங்கு  நாயுடன் இணைந்து கௌசிக்கும் குளத்தில்  குளித்து கொண்டிருந்தார்.  

அப்போது ஆழமான பகுதிக்கு நாய் சென்றுவிட்டதால், பதற்றமடைந்த கெளசிக் நாயை கரைக்கு கொண்டு வருவதற்காக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். நாயை தேடும் தீவிரத்தில் குளத்தின் மைய பகுதிக்கு சென்ற கெளசிக் மூச்சு திணறி நீரில் மூழ்கி உள்ளார்.

இதனை அறிந்த அவரது நண்பர்கள் கெளசிக்கை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் எவ்வளவு தேடியும் கெளசிக் கிடைக்காததால், உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், குளத்தின் அடியில் இருந்த சேற்றில் சிக்கி உயிரிழந்து கிடந்த கெளசிக்கின் உடலை மீட்டு, மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.