தாம்பரத்தில் பிடிப்பட்ட முகமூடி திருடன்!!!
புறநகர் பகுதியில் பெண்களிடம் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட முகமூடி திருடனை சினிமா பட பாணியில் பீர்க்கண்காரணை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு உட்பட்ட முடிச்சூர், சதானந்தபுரம் வண்டலூர் வெளிவட்ட சாலைகளில் நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து தொடர்ந்து தங்க தாலி செயினை பறித்து வருவதாக பீர்க்கன்காரணை குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜோதி ராமன் அவர்களுக்கு புகார் வந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் தலைமையில் சத்தியநாதன் விவேகானந்தன், சதாம் உசேன் பாலன் ஆகிய நான்கு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு செயின் பறிப்பு நடைபெற்ற நடைபெற்ற இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி குற்றவாளியை தேடி வந்தனர். சிசிடிவி காட்சியில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து நடந்து செல்லும் பெண்களிடம் தாலி தங்க செயினை பறிப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் நேற்று பெருங்களத்தூர் அருகே ஒரு பெண்ணிடம் தங்கச் செயினை பறிக்க முயன்ற போது, பொதுமக்கள் கூச்சலிடவே, அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வண்டலூர் அருகே தப்பி செல்ல முயன்றுள்ளார். அப்போது, தனிப்படை அமைத்த போலீசார், வண்டலூர் மேம்பாலத்தில் அந்த நபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்துள்ளனர்.
பின், அவரை பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் வந்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் பெயர் மணிகண்டன் என்பதும் பெருங்களத்தூர் பகுதியை சார்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி, மாடம்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனகளை பழுது பார்க்கும் மெக்கானிக் வேலை செய்து வருவதாகவும் தனக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் அதனை திருப்பி செலுத்துவதற்காக அவ்வப்போது செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
இதுவரை 25 சவரன் தங்க நகை திருடியதாகவும் ஒப்புக்கொண்டார் .மேலும் போலீசார் பிடிபட்ட நபரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.