வாய்தாவிற்கு வந்த ரவுடியை வீட்டுவாசலில் வெட்டிக்கொன்ற கொடூர கும்பல்...

சென்னையில் வாய்தாவிற்கு வந்த ரவுடியை வீட்டுவாசலில் வைத்து வெட்டிக்கொலை செய்யதுவிட்டு உடலை சாலையோரம் வீசி சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

வாய்தாவிற்கு வந்த ரவுடியை வீட்டுவாசலில்  வெட்டிக்கொன்ற கொடூர கும்பல்...

வில்லிவாக்கம் பாரதி நகர் தெருவை சேர்ந்த அலெக்ஸ் என்பவரை, மூன்று பேர் கொண்ட கும்பல் அதே பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவில் அருகே வைத்து சரமாரியாக தாக்கி அருவாளால்  தலை மற்றும் கழுத்து ஆகிய பகுதியில் வெட்டினர். அப்போதும் வெறி தீராத அந்த கும்பல் ரத்ததுடன் இருந்த அலெக்ஸை இருசக்கர வாகனத்தில் ஏற்றி செல்லும் வழியெல்லாம் அந்த நபரை கொடூரமாக தாக்கியவாறு சென்றதாக கூறப்படுகிறது. இதைக் கண்டு பதறிப்போன அப்பகுதி மக்கள் அலெக்ஸின் தாயாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். பின்னர் 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு நியூ ஆவடி சாலை அடுத்த ஆட்டுத் தொட்டி அருகே முகம் முழுவதும் சிதைந்த நிலையில் அகெக்ஸின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையில்  போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஐ.சி.எப் கேரேஜ் பனிமனையில்  ஒப்பந்தப் பணியாளராக பணிபுரிந்து வந்த கருணா என்கிற கருணாகரனை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அலெக்ஸ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது தெரியவந்தது. இந்நிலையில் அலெக்ஸ் கொலை செய்த கருணாவின் மரணத்திற்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததா அல்லது  வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.