உயர் அதிகாரியின் துன்புறுத்தலால் காவலர் தூக்கிட்டு தற்கொலை! வீடியோவால் பரபரப்பு!

சென்னை அருகே போக்குவரத்து காவலர் மனஉளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயர் அதிகாரியின் துன்புறுத்தலால் காவலர் தூக்கிட்டு தற்கொலை! வீடியோவால் பரபரப்பு!

சென்னை கொரட்டூர் டி.வி.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. திருவல்லிக்கேணி பகுதியில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்த இவர், கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ராஜமங்கலம் உதவி ஆய்வாளர் மகேஸ்வரிதான் தன் மரணத்திற்கு காரணம் என்றும், அவருக்கு உயர் அதிகாரிகளின் பழக்கம் உள்ளதால் இந்த வழக்கில் இருந்து தப்பித்து விடுவார்கள் என்றும் வீடியோவில் குறிப்பிட்டார்.

இந்த வீடியோ காவல் வட்டாரத்தில் வைரலாக பரவிய நிலையில், ஆவடி மாநகர காவல் ஆணையர் உடனடியாக கிருஷ்ணமூர்த்தியை கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டார். இதனடிப்படையில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை கிருஷ்ணமூர்த்தி தமது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொரட்டூர் போலீசார், அவரின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். மேலதிகாரியின் துன்புறுத்தல் காரணமாக காவலர் உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.