நிலத்தகராறு...அரிவாளால் வெட்டப்பட்டு ஒருவர் படுகொலை....

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி பகுதியில் நிலத்தகராறு காரணமாக அரிவாளால் வெட்டப்பட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலத்தகராறு...அரிவாளால் வெட்டப்பட்டு ஒருவர் படுகொலை....

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த சொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் கருத்தபாண்டியன்  இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் செல்லையா என்பவரது மகனான சந்தனபாண்டியன் என்பவருக்கும் இடையே பல வருடங்களாக நிலப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே நிலப்பிரச்சனை தகராறு முற்றவே, கோபமடைந்த சந்தனபாண்டியன் அரிவாளை எடுத்து கருத்தப்பாண்டியனை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சொக்கம்பட்டி போலீசார், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கருத்தப்பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சந்தனபாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கருத்தபாண்டியன் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

தகவலறிந்து சென்ற போலீசார் கருத்தபாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தற்போது இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சொக்கம்பட்டி போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.