10-க்கும் மேற்பட்ட நகைக் கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனை...!

வரி ஏய்ப்பு புகாரின் பேரில், சென்னை, திருச்சியில் உள்ள பல்வேறு நகைக்கடைகளில் அமலாக்கத்துறையினர் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னை பாரிமுனையில்  உள்ள 10க்கும் மேற்பட்ட நகைக் கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். என்.எஸ்.சி போஸ் சாலையில் மோகன்லால் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை, ஜே. கே ஜுவல்லரி உள்ளிட்ட  நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தி வருகின்றனர்.  2020ம் ஆண்டு மோகன்லாலுக்கு சொந்தமான நிறுவனங்களில் நடந்த சோதனையில், 500 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், திருச்சி மாநகர் பகுதியான கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெரிய கடை வீதியில் உள்ள சக்கர ஜெயின் ஜுவல்லரி மற்றும் ஜாபர்ஷா தெருவில் உள்ள ரூபி ஜுவல்லரி, சூர்யா ஜுவல்லரி, விக்னேஷ் ஜுவல்லரி ஆகிய 4 நகைக்கடையில், 6 இன்னோவா கார்களில் 7  சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன், 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு 12 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.