மேட்ரிமோனியல் கொள்ளையன்.... சிக்கியது எப்படி?!!

விவாகரத்து பெற்ற மற்றும் நீண்ட நாட்களாக திருமணமாகாத பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி கொள்ளையடித்த கொள்ளையன்.

மேட்ரிமோனியல் கொள்ளையன்.... சிக்கியது எப்படி?!!

திருமண பதிவு செயலி மூலம் பதிவு செய்து அதன் மூலம் பெண்களைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டு செயல்பட்டுள்ளான் கொள்ளையன்.  தமிழகம் முழுவதும் 5 பெண்களை இதுபோன்று ஏமாற்றி இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

புகார் அளித்த பெண்:

புதுக்கோட்டை ஆலங்குடி பகுதியை சேர்ந்த 25 வயது  இஸ்லாமிய பெண் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.  அதில் கடந்த 2017 ஆம் ஆண்டு தனக்கு திருமணம் நடந்து சில மாதங்களிலேயே விவாகரத்து ஆனதாகவும், இதனால் தனியார் முஸ்லிம் திருமண பதிவு செயலியில் இரண்டாம் திருமணத்திற்காக பதிவு செய்து வைத்திருந்ததாகவும், செயலி மூலம் பழக்கம் ஏற்பட்ட முகமது உபேஸ் என்கிற நபர் 10 நாட்களாக தன்னிடம் பேசி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புகாரில்..:

அதில் மேலும் 10 நாட்களுக்குப் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த முகமது உபேஸ், அதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என கூறி சென்னை ராயப்பேட்டை பகுதிக்கு வருமாறு அவரை அழைத்ததாகவும் அதன் அடிப்படையில் சுமார் 50 சவரன் நகைகளுடன் ராயப்பேட்டையில் உள்ள தனியார் மாலுக்கு பெண்ணை வரவழைத்த முகமது திருமண செலவிற்காக நகைகளை விற்று பணம் வாங்கி எடுத்து வருவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த பெண் நகைகள் அனைத்தையும் கொடுத்துவிட்டு தனியார் மாலில் காத்திருந்துள்ளார்.   வெகு நேரமாகியும் முகமது வராத காரணத்தால் ஏமாற்றம் அடைந்த அந்த பெண் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கைதும் விசாரணையும்:

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அண்ணாசாலை போலீசார் மாலில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.  மேலும் செல்போன் சிக்னல்களையும் ஆய்வு செய்தனர்.  எனினும் ஏற்கனவே உள்ள குற்றவாளிகளின் பட்டியலிலும், சந்தேகப்படும் படியான பட்டியலிலும் முகமது புகைப்படம் இல்லாததால் அவரை பிடிப்பதில் சிக்கல் நீடித்தது.  ஒரு மாத காலம் தொடர் விசாரணை நடத்தியதில் மோசடியில் ஈடுபட்ட முகமது ஈரோடில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் நேற்று ஈரோட்டிற்கு சென்ற அண்ணா சாலை போலீசார் அங்கு ஒரு தனியார் லாட்ஜில் பதுங்கி இருந்த முகமதை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

பெண்களை ஏமாற்றி..:

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை முகமது தெரிவித்துள்ளார்.  ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது உபேஸ்(37) நிரந்தரமான எந்த வேலையும் இல்லாததால், விவாகரத்தான இஸ்லாமிய பெண்கள் மற்றும் நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருக்கும் இஸ்லாமிய பெண்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். அதன்படி முஸ்லிம் திருமண பதிவு செயலியில் திருமணத்திற்கு பெண் தேடுவது போல் பதிவு செய்துவிட்டு, அதன் மூலம் தொடர்பு கொள்ளும் பெண்களை அணுகி நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறை வாகி விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அதைப்போலவே..:

அதன்படியே சென்னைக்கு புதுக்கோட்டையை சேர்ந்த பெண்ணை வரவழைத்து மோசடியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.  மேலும் இதே பாணியில் மதுரை, வாணியம்பாடி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் ஐந்து முஸ்லிம் பெண்களை ஏமாற்றி இருப்பதாக தெரிவித்த அவர் இதுவரை போலீசில் சிக்காமல் மோசடியில் ஈடுபட்டதையும் தெரிவித்துள்ளார்.  எனவே தான் முகமதை பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சிறையிலடைப்பு:

மேலும் மோசடியில் ஈடுபட்டு விலை உயர்ந்த செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை முகமது  வாங்கியுள்ளார். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் புதுக்கோட்டையை சேர்ந்த பெண்ணிடம் இருந்து திருடி சென்ற நகையில் ஒரு பகுதியையும், ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் மீட்டுள்ளனர். விசாரணைக்கு பிறகு முகமதை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க:  ஆவின் பணி நியமனத்திலும் அதிரடி காட்டிய பி.டி.ஆர்.... அப்படி என்ன செய்தார்?!!