74 வயது விவசாயி அடித்து கொலை... 8 மாதங்களுக்கு முன்பே கொன்று புதைத்த சம்பவம்...

ஆத்தூர் அருகே அடித்து கொலை செய்யப்பட்ட முதியவரின்  உடலை 8 மாதங்களுக்கு பிறகு தோண்டி எடுக்கும் பணியை  போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

74 வயது விவசாயி அடித்து கொலை... 8 மாதங்களுக்கு முன்பே கொன்று புதைத்த சம்பவம்...

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. 74 வயது முதியவரான இவருக்கு, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சிவகங்கைபுரம் என்ற கிராமத்தில் 7 ஏக்கர் சொந்த நிலம் உள்ளது. இந்த நிலத்தை,  அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய்க்கு விலை பேசி வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்விற்கு பிறகு சுப்பிரமணியை காணவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து சுப்பிரமணியின் உறவினரான கனகம்  என்பவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை தேடிவந்தனர்.  

இந்நிலையில், ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் பகுதியை சேர்ந்த ராமதாஸ், குமார், அறிவழகன் ஆகியோருடன் சேர்ந்து சக்திவேல், பெருமாள் ஆகியோர் முதியவர் சுப்பிரமணியை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதில் ராமதாஸ், குமார் ஆகிய இருவரும் பிடிபட்ட நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆத்தூர் அருகே சிவகங்காபுரத்தில் உள்ள சக்திவேலுவுக்கு சொந்தமான  நிலத்தின் அருகே முதியவர்  சுப்பிரமணி உடல் புதைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்துள்ள போலீசார், சம்பவ இடத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெருமாள், சக்திவேல், அறிவழகன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.