மகன் இறந்த துக்கத்தில் தற்கொலை முயற்சி செய்த தந்தை!
மகன் இறந்த துக்கம் தாளாமல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தந்தை தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆலந்தூர் மாதவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (52). பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆன இவர் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில்களில் பாடல் பாடி யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவருடைய மகன் சாலை விபத்தில் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த இரண்டு நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த சுந்தரமூர்த்தி இன்று காலை செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே ஆக்ஸா பிளேடால் தனது கருத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதனைக் கண்ட பேருந்து நிலையத்தில் இருந்த சகப்பயணிகள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகன் இறந்த துக்கம் தாலாமல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.