ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

தமிழ்நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களுக்கு சொந்தமான நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. ரியல் எஸ்டேட் மூலமாக ஈட்டிய பணத்தை வெளிநாட்டில் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக பெறப்பட்ட தகவலையடுத்து இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. 

சென்னை ராஜீவ் காந்தி சாலை, தியாகராய நகர் உள்பட தமிழ்நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களின் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை தியாகராய நகரில் சண்முகம் என்பவர் வீட்டில் ஐந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் தமிழ்நாடு பாஜக அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஜோதிமணி என்பவரின் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. இரண்டு மணி நேரமாக நடைபெற்ற சோதனையின் போது வங்கி அதிகாரிகளை வரவழைத்து விசாரணை நடைபெற்றது. சோதனை முடிவில் ஜோதிமணி வீட்டிலிருந்து சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர். சண்முகம் இரண்டாவது தளத்திலும் ஜோதிமணி கீழ்தளத்திலும் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல், மதுரை, தஞ்சாவூர் , திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


இதையும் படிக்க: சிறைவாசியை காட்டுமிராண்டித் தனமாக தாக்கிய "OC" டீம்!