வாகனங்களை அடித்து உடைத்து போலீசார் மீது தாக்குதல் நடத்திய போதை கும்பல்...

சென்னை அம்பத்தூர் அருகே போலீஸ் ஜீப் உட்பட 5 வாகனங்களை அடித்து உடைத்த போதை ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

வாகனங்களை அடித்து உடைத்து  போலீசார் மீது தாக்குதல் நடத்திய போதை கும்பல்...

அம்பத்தூர் ஐசிஎப் காலனி, குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசித்து வரும் கோகுலை, குடிபோதையில் இருந்த சில இளைஞர்கள் தாக்கியுள்ளனர். பின்னர், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு செல்போன் மூலமாக கோகுல் தகவல் கொடுத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கோகுலை தாக்கியவர்களுள் ஒருவரைப் பிடித்துள்ளனர்.

பின்னர் போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓடிய அவர், மேலும் 4 இளைஞர்களை அழைத்துக் கொண்டு மீண்டும் போலீசாரிடம் வந்துள்ளார். பின்னர் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட அவர்கள், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். தாக்குதலில் இருந்து போலீசார்  காயமின்றி தப்பிய நிலையில், அங்கிருந்த 2 ஆட்டோ, ஒரு கார், ஒரு வேன் மற்றும் போலீசாரின் ஜீப் ஆகிவற்றை கற்களால் அடித்து உடைத்து விட்டு, தலைமறைவாகி உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 20க்கும் மேற்பட்ட போலீசார், தலைமறைவான போதை ஆசாமிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.